பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
திருவெண்ணெய்நல்லூர்: அரசு, வேம்பு ஆகிய மரங்களை மணமக்களாக நினைத்து, கிராம மக்கள் தடபுடலாக, திருமண சடங்குகள் நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடையார் மாணிக்க விநாயகர் கோவில் வளாகத்தில், அரச மரமும், வேப்ப மரமும் பிணைந்து வளர்ந்துள்ளன. இவற்றுக்குத் திருமணம் செய்தால், இப்பகுதி சுபிட்சமடையும் என, ஜோதிடர்கள் கூறினர். இதையடுத்து, ஊராட்சி தலைவர் ஜெயந்திபாபு மற்றும் கிராம பொதுமக்கள், மரங்களை மணமக்களாக்கி, திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். கடந்த, 22ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, திருமணம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையும், கலசபூஜை, பூர்ணாஹூதியும் நடந்தது. 57 தட்டு சீர்வரிசைகள் மற்றும் பாலி கொண்டு வரப்பட்டது. காலை, 9:10 மணிக்கு அரசு, வேம்பு மரங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அரச மரத்திற்கு பட்டுவேட்டி, வேப்ப மரத்திற்கு பட்டுப்புடவை அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 10:10 மணிக்கு, திருமாங்கல்யதாரணம், தீபாராதனை நடந்தது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மாங்கல்ய பொருட்களும், திருமண விருந்தும், தாம்பூலப்பையும் வழங்கப்பட்டது. சங்கீத இசைக் கச்சேரி மற்றும் நாதஸ்வர கச்சேரி நடந்தது.