பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
சென்னை: திருவொற்றியூரில் உள்ள, ஆதிபுரீஸ்வரர் கோவிலில், சோழர் கால ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓவியம், 7ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில், 1,300 ஆண்டுகாலத் தொன்மை உடையது. ஆதிபுரீஸ்வரர் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இதில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வு மாணவர்கள், தீபிகா சங்கரலிங்கம், விஜய் ஆகியோர் அங்கு ஆய்வுப் பணி மேற்கொண்டனர். ஆய்வில், முன்மண்டபக் கருவறைக்குள், ஓவியம் ஒன்று இருந்ததை அறிந்தனர். அந்த ஓவியம், 90 சதவீதம் சிதைந்திருந்த நிலையில், காணப்பட்டது. உடனே, தொல்லியல் துறையின் பொறுப்பு ஆணையர், வசந்தி, கல்வெட்டு ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர், அக்கோவிலில் ஆய்வு செய்தனர். ஓவியத்தில் காணப்படும் குறிப்புகளின் மூலம், அது சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பது, உறுதியானது. தற்போது, ஓவியத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளில், தொல்லியல் துறை ஈடுபட்டு உள்ளது. - நமது நிருபர் -