சிதம்பரம்: திருக்கயிலாயம் சென்றவர்களுக்கு பாராட்டு மற்றும் பட்டம் வழங்கும் விழா சிதம்பரத்தில் நடந்தது. சிதம்பரம் கைலாஷ் மானசரோவர் ராஜ யாத்திரைக் குழு சார்பில் இந்த ஆண்டு திருக்கயிலாயம் சென்றவர்கள், பாரத் பரிக்கிரமம் செய்தவர்களுக்கு பாராட்டு மற்றும் பட்டம் வழங்கும் விழா நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் திருக்கயிலாயத்திற்கு முதல் முறை சென்றவர்களுக்கு கயிலைமணி, இரண்டு ஆண்டு சென்று வந்தவர்களுக்கு கயிலைநாதர், மூன்று மற்றும் அதற்கு மேல் சென்றவர்களுக்கு கயிலைவாசி என பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திருக்கயிலாயம் சென்ற 110 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிதம்பரம் ஆடிட்டர் நடராஜபிரபு தலைமை தாங்கினார். கைலாஷ் யாத்திரை ஒருங்கிணைப்பாளர் சென்னை பாலகிருஷ்ணன் வரவேற்றார். வடலூர் ஊரன் அடிகளார் பங்கேற்று திருக்கயிலாய யாத்திரை சென்றவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார். சித்தூர் நகரி சிவானந்த யத்தீந்திர சுவாமி ஆசிரமம் சுவாமி சரணானந்தா அருளாசி வழங்கினார். ராஜ யாத்திரை நிர்வாகிகள் சிவராமன், மேகநாதன், நாராயணன், கணபதி, நாகராஜ் குருக்கள் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.