பதிவு செய்த நாள்
03
செப்
2013
10:09
சென்னை: கடந்த 21 ஆண்டுகளாக பெரம்பூர் ஜெயா தோட்ட குடியிருப்புவாசிகள் வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது ஜெயா தோட்டம். அங்கு 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் குறித்து, பெரம்பூர் ஜெயா தோட்ட நண்பர்கள் குழுவினர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பின் அதை கடலில் கரைப்பதால், மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட சிலை கடலில் கரைவதும், அதனால் கடல் மாசடைவதும், எங்களை பெரிதும் பாதித்தது. அதனால் விநாயகர் சதுர்த்தியின் போது வைக்கப்படும் சிலை, நம்மால் சிதைக்கப்படாமல், பிறருக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்று எண்ணினோம். அதன் பயனாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இரண்டு முதல் இரண்டரை அடி உயரத்தில் பல வடிவங்களில் ஆன விநாயகர் கற்சிலையுடன், பலிபீடம், மூஞ்சூறு உள்ளிட்டவைகளை வாங்கினோம். சிலையை வீட்டில் வைத்து முறையாக பூஜித்து, பின் குடியிருப்புக்கு மத்தியில், விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்வோம். விநாயகர் சதுர்த்தி முடிந்து, மூன்று நாட்கள் கழித்து, விநாயகர் சிலையை பலிபீடம் மற்றும் மூஞ்சூறு வாகனத்துடன் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு தானமாக கொடுத்து விடுவோம். இவ்வாறு கடந்த 21 ஆண்டுகளாக, நாங்கள் வழிபட்ட சிலையை கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்தாண்டு வைக்கப்படும் கற்பக விநாயகர் சிலையை, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேதாந்தீஸ்வரர் கோவிலுக்கு கொடுப்பதாக திட்டமிட்டு உள்ளனர்.