ஏர்வாடி: சிறுமளஞ்சி கண்ணன் சேவா சங்கம் நடத்திய 26ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. சிறுமளஞ்சி கண்ணன் சேவா சங்கம் சார்பில் நடந்த உறியடி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் காலையில் கண்ணன் சேவா சங்க கொடியேற்றப்பட்டது. சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. மதியம் திருவேங்கட வெங்கடாஜலபதி கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பெருமாள் கோயிலில் இருந்து மாயக்கண்ணன் ஊர்வலமாக வந்து உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் காலையில் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், மதியம் பெண்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடந்தது. இரவு பரிசளிப்பு விழா நடந்தது. ஏற்பாடுகளை சிறுமளஞ்சி கண்ணன் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.