ஏரல்: ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா கோலாகலமாக நடந்தது. ஏரல் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நான்காம் செவ்வாய்கிழமை நடக்கிறது. இந்த ஆண்டு கொடைவிழா நேற்றுமுன்தினம் (10ம் தேதி) நடந்தது. கொடைவிழா அன்று காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து நகர்வீதி வலம் வருதல், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடுதல், மதிய தீபாராதனை, மாலை 3 மணிக்கு அம்மன் கேடய சப்பரத்தில் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலுக்குப் புறப்படுதல் மாலை தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து மேள வாத்தியங்களுடன் புறப்பட்டு வருதல், இரவு கரகாட்டம், பின்னர் அம்பாள் லேபனம் புஷ்ப அலங்கார தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதலும், தொடர்ந்து அம்பாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கரகாட்டம் வாணவேடிக்கையுடன் நகர் வீதி வலம் சென்ற நிகழ்ச்சியும் நடந்தது. கொடை விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நேற்று (11ம் தேதி) காலை மற்றும் மதியம் அம்மனுக்கு தீபாராதனை, இரவு மேளம் மற்றும் கரகாட்டம் நடந்தது. இன்று (12ம் தேதி) இரவு 9 மணிக்கு ஏரல் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின்முறை சங்கத்தின் முன்பு சென்னை வாழ் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் உறவின்முறை நாடார் சங்கத்தின் சார்பில் திரை இசை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி இரவு வழக்காடு மன்றம், 14ம் தேதி இரவு 7 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மேஜிக்ஷோ நடக்கிறது. வரும் 15ம் தேதி இரவு 9 மணிக்கு இன்னிசை கிராமிய கலைநிகழ்ச்சி நடக்கிறது. கொடைவிழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.