பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
திருத்தணி: மத்துர் மற்றும் புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சிகளில் நடந்த ஜாத்திரை திருவிழாவில், கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி ஒன்றியம், மத்தூர் மற்றும் புச்சிரெட்டிப்பள்ளி ஆகிய இரண்டு ஊராட்சிகளில், ஜாத்திரை திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி எல்லையம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்களில் பெண்கள் கூழ் ஊற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து, மாலையில் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். இரவு, 7:30 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பின்னர், கிராமத்தில் அனைத்து தெருக்களிலும், பூ கரகத்துடன், கங்கையம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட, 21வது வார்டு முருகூர் பகுதியில் ஜாத்திரை திருவிழா நடந்தது. கங்கையம்மன் திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை கங்கையம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஏரியில் கரைத்து வழிபட்டனர்.