பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மூலத்துறை கிராமத்தில் சித்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.கும்பாபிஷேக விழாவில் நேற்று காலை 4.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை நடத்தப்பட்டது. காலை 6.15 மணி முதல் 7.15 மணிவரை கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், தசதரிசனம், மஹாபிஷேகம், அலங்காரம், மஹாதீபாராதனை பிரசாத விநியோகம் மற்றும் அன்னதானம் நடந்தது. இவ்விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சித்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மனை தரிசித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள செல்வகணபதி, மாகாளியம்மன் மற்றும் கருப்பராயசாமி திருக்கோவிலில் இரண்டாவது திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. காலை 9.30 மணி முதல் கோபுர கலசங்கள் கும்பாபிஷேகமும், தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல் விநாயகர், மாகாளியம்மன், கருப்பராய சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குட நீராட்டு நடந்தது. மேலும், தசதரிசனம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. காலை 11.00 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.