பதிவு செய்த நாள்
23
செப்
2013
03:09
தேவாரம்: கோம்பை திருமலைராயப் பெருமாள் மலைக்கோயிலில், புரட்டாசி முதல் சனி வாரத்திருவிழா நடந்தது. கோம்பை ராமக்கல் மெட்டு மலையடிவாரத்தில், பிரசித்தி பெற்ற திருமலைராயப் பெருமாள் கோயில் உள்ளது. ஆனந்த சயனத்தில், சுயம்புவாக எழுந்தருளியுள்ள மூலவரை தரிசிக்க தேனி, திண்டுக்கல், மதுரை, மத்திய கேரளா பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வசதியாக போடி, கம்பம், தேவாரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஊர்க்கோயிலிலிருந்து பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக உற்சவர் மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. கோம்பை வட்டார சுகாதார மையம் மூலமாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கேரளாவிலிருந்து வனப்பாதை வழியாக நடந்து வந்த பக்தர்களுக்கு, தண்ணீர், உணவு வசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோம்பை ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார் செய்திருந்தார்.