பதிவு செய்த நாள்
24
செப்
2013
10:09
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி வீசியதால், பக்தர்கள் பரவசப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், பிரசித்தி பெற்ற பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை, 6:20 மணிக்கு, அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி பரவியது. அப்போது, உஷக்கால பூஜை நடந்து கொண்டிருந்ததால், சூரிய ஒளியை பார்த்த பக்தர்கள், பரவசம் அடைந்து சுவாமி தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள், சுவாமி மீது சூரிய ஒளியை பார்க்கலாம். நேற்று முன்தினம் காலையும், நேற்றும் சூரிய ஒளியை பக்தர்கள் தரிசித்தனர். இதே போல் இன்றும் தெரியும், என்றார். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த சிவக்குமார சிவச்சாரியார் கூறுகையில், ""தட்சிணாயனத்தில் புரட்டாசி மாதத்திலும், உத்தராயணத்தில் மாசி மாதமும், மூன்று நாட்கள் சூரிய ஒளி, லிங்கத் திருமேனி மீது தெரிவதை தரிசிக்கலாம். இம்மாதங்களில், பவுர்ணமியில் இருந்து அமாவாசைக்குள், சூரிய ஒளி விழும், என்றார்.