பதிவு செய்த நாள்
03
அக்
2013
01:10
ஊட்டி: தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான மொற் பர்த், ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசித்து வரும் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான மொற் பர்த் பண்டிகை, ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ கொண்டாடப்படுவது வழக்கம். இதில், மாவட்டத்தில் உள்ள தோடரின மக்கள் பங்கேற்று கோலாகலமாக கொண்டாடுவர். தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் (கிராமங்களின்) தலைமை மந்தான தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் இப்பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்து கொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த கோவிலில் முன்பு சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளதால் தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்துகின்றனர். பின், தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றனர். வழிபாடு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் பால், நெய், இனிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக பிரசாதம் அனைவருக்கும் வழங்குகின்றனர். தோடரின மக்களின் தலைவர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடரின கிராமங்களில் வாழும் மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர். இந்த சிறப்பு திருவிழாவை காண, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும், சுற்றுலாப் பயணிகளும், நம் நாட்டின் பல பகுதிகளின் மக்களும், ஊட்டிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.
தகவல்: என். பிரதீபன்.
படம்: ஒய்.ஜே. ரகு.