பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணத்தில், முத்தாரம்மன் கோயில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கர்நாடக மாநிலம், மைசூர் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றது. அதற்கு அடுத்ததாக, தூத்துக்குடி மாவட்டத்தில், கிராமிய கலைநயத்துடன், குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை காலை, 5:00 மணிக்கு வீதியுலாவும், 8:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. பின், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கிறது. தினமும் அம்மன் பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடனாக, பக்தர்கள் மாறு வேடங்கள் அணிந்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வர். உச்சகட்டமாக, வரும், 14ம் தேதி, கோயில் கடற்கரையில், இரவு, 12:00 மணிக்கு அம்மன், மகிஷாசுரனை வதம் செய்வார்.