பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
திருப்பூர்: பெருமாள் பக்தர்களை கண்டால், எம தூதர்கள் கூட பயப்படுவர், என முகுந்தாச்சார்யார் சுவாமிகள் பேசினார். திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள கருப்பராயர் சுவாமி திருமண மண்டபத்தில், ஸ்ரீவேங்கடேச சுப்ரபாத விளக்கவுரை ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. மதுரை அழகர் கோவில் கோமடம் முகுந்தாச்சார்யார் சுவாமிகள் பேசியதாவது: பகவானை பற்றி அறிந்து கொள்வதற்கு வேதங்கள் ஆதாரமாக உள்ளன. வரதராஜ பெருமாளின் அவதாரமாக காஞ்சிபுரத்தில் உதித்தவர் பிரதிவாத பயங்கரர் அண்ணா; வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இவர், வேங்கடாச்சார்யரின் மகளான பெருந்தேவி நாச்சியாரை மணம் முடித்தார். ஒருமுறை, காசியை சேர்ந்த ரிஷியமந்தீஸ்வரர் என்ற பண்டிதர், கல்வி கற்ற செருக்கு காரணமாக, காஞ்சிபுரம் சென்று, பண்டிதர்களை தர்க்கம் செய்ய அறைகூவல் விடுத்தார். ஆச்சார்யார் வரதராஜர், தனது சீடர் பயங்கரர் அண்ணாவை அனுப்பினார். மூன்று நாட்கள் தர்க்கம் நடந்தது. அன்றிரவு, ரிஷியமந்தீஸ்வரரின் கனவில் வந்த சரஸ்வதி, "ஒவ்வொரு முறையும் என்னை பயன்படுத்தி தர்க்கத்தில் நீ வென்றிருக்கிறாய். இப்போது, நீ மோதுவது பரம்பொருளிடம். எனவே, உன் நாவில் அமரமாட்டேன்; நீ அவரை சரணாகதி அடைந்துவிடு என்றாள். உடனே, பிரதிவாத பயங்கரரின் காலில் விழுந்த பண்டிதர், தான் தோற்றுவிட்டதாக தெரிவித்தார்; உபதேசங்கள் வழங்கிய பிரதிவாதி பயங்கரர், திருப்பதி சென்றார். அங்கிருந்த அர்ச்சகர் சோழப்பரிடம், பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதாக தெரிவித்தார். பெருமாளின் விருப்பப்படி, ஆகாச கங்கையில் இருந்து, தினமும் தீர்த்தம் கொண்டுவரும் உபகாரம் செய்தார். அந்த சமயத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த வைஷ்ணவர் ஒருவர், அழகிய மணவாள மாமுனிகளை பற்றி கூற, பெருமாளிடம் அனுமதி பெற்று, ஸ்ரீரங்கம் புறப்பட்டார்; அங்கு சென்ற இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அதன்பின் மணவாள மாமுனிகள், பிரதிவாதி பயங்கர அண்ணா சுவாமியுடன், திருப்பதிக்கு வந்தடைந்தார். பெருமாளின் பாதங்களை பார்த்து பரவசப்பட்ட அவர், பிரதிவாதி பயங்கரரிடம், பெருமாளை துயில் எழுப்ப சுப்ரபாதம் எழுத வேண்டும் என்றார். அவரது உத்தரவுப்படி, பிரதிவாதி பயங்கரர், சுப்ரபாதம் பாடினார். ஒருநாள் அல்லது ஒரு நாழிகை உயிர்வாழ்ந்தாலும், பெருமாளை வணங்கி வாழ வேண்டும். அவனது பக்தர்களை கண்டால், எம தூதர்கள் கூட பயப்படுவர். பெருமாளின் திருவடிகளை தொழுது வணங்கி வாழ்ந்தால் நன்மையே உண்டாகும்.இவ்வாறு, முகுந்தாச்சார்யார் பேசினார்.