பதிவு செய்த நாள்
04
அக்
2013
10:10
திருநெல்வேலி: சீவலப்பேரி துர்காம்பிகா தேவஸ்தானத்தில் நாளை (5ம் தேதி) நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்படுகிறது. சீவலப்பேரி துர்காம்பிகா தேவஸ்தானம் கோயிலில் நாளை (5ம் தேதி) நவராத்திரி விழா துவங்குகிறது. கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். வசந்த மண்டபத்தில் அம்பாளுக்கு கொலு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நவராத்திரி நாளில் தினமும் மாலை 6 மணிக்கு சொற்பொழிவு, பரதநாட்டியம், பஜனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி துர்காஷ்டமியை முன்னிட்டு மஹா சண்டிஹோமம் நடக்கிறது. காலையில் கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, சுகாசினி பூஜை, கன்னியா பூஜை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு மகாசண்டி ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. யாகசாலை பூஜையை தொடர்ந்து யாகசாலையில் உள்ள கும்பங்கள் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அம்பாள் சன்னதி சென்றடையும். தொடர்ந்து மகா கணபதி, மகா விஷ்ணு, துர்காம்பிகை அம்பாளுக்கு பாலாபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்கள் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம், இரவு சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை துர்காம்பிகா தேவஸ்தான டிரஸ்ட் தலைவர் லீலா கிருஷ்ணன், செயலாளர் சுப்பையா, திருப்பணிக்குழு சேர்மன் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் தேவஸ்தான வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.