முப்பிடாதியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2013 11:10
சுரண்டை: சுரண்டை சிவகுருநாதபுரம் முப்பிடாதியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோயில் பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் ஆண்டிற்கு 2 முறை திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு வழிபாட்டு குழுவினரின் பஜனை, சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. 2ம் திருநாளான 2ம்தேதி சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் வயிரவன், தமிழ்த்துறை பேராசிரியர் தர்மலிங்கம் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு, 3ம் திருநாளன்று வக்கீல் திருமால்வடிவு நல்லமணியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இன்று (4ம்தேதி) 4ம் திருநாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு கண்டமங்கலம் சாந்தி குழுவினரின் வில்லிசை, 5ம் திருநாளான நாளை (5ம்தேதி) பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், வரும் 6ம்தேதி அய்யாவின் அருளிசை புலவர் சிவச்சந்திரனின் இசைவழிபாடு நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வரும் 7ம்தேதி 7ம் திருநாளை முன்னிட்டு இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் கீதாஞ்சலி குழுவினரின் இன்னிசை கச்சேரி, இரவு 12.30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதியம்மன் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. நிறைவு நாளான வரும் 8ம்தேதி 8ம் திருநாள் இரவு 8 மணிக்கு அரியப்பபுரம் செந்தில்குமாரின் வில்லிசை, இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு, அதிகாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை பெரியோர்களும், நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.