பதிவு செய்த நாள்
04
அக்
2013
12:10
உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நாளை (5ம் தேதி) தொடங்கி 9 நாட்கள் கோலாகலமாக நடக்க உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி
பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி 460 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள . பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் திருமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இலவச லட்டு: திருப்பதி பிரம்மோற்சவத்தை ஒட்டி, பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, இலவச லட்டு வழங்கப்படும் என, திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கண்ணையா கூறினார். தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சென்னையில் நேற்று கண்ணையா கூறியதாவது: திருப்பதியில் நாளை முதல்,13ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் வரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை, எழும்பூர் காச்சிக்குடா இடையே இயக்கப்படும் காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பிரம்மோற்சவத்திற்கு திருப்பதி மலையடிவாரத்தில் இருந்து, தினசரி, 25 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரம் பேர் பாத யாத்திரையாக திருமலைக்கு வரலாம் என, எதிர்பார்கப்படுகிறது. அவர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, 4,500 போலீசார் பணியமர்த்தப்படுவர். மேம்பட்ட சுகாதார வசதி, மருத்துவ குழுக்கள், தங்கும் இடவசதி, இலவச உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க, அதிநவீன வசதிகளோடு ஒருங்கிணைக்கப்பட்ட கன்ட்ரோல் அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, கண்ணையா கூறினார்.
நிகழ்ச்சிகள்:
5ம் தேதி மாலை - கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகனம்
6ம் தேதி காலை - சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம்
7ம் தேதி காலை - சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல்
8ம் தேதி காலை - கல்பவிருட்ச வாகனம், இரவு சர்வபூபால வாகனம்
9ம் தேதி காலை - மோகினி அவதாரம், இரவு கருட வாகனம்
10ம் தேதி காலை - அனுமந்த வாகனம், மாலை தங்க ரதோற்சவம், இரவு யானை வாகனம்
11ம் தேதி காலை - சூரியப்பிரபை, இரவு சந்திரப்பிரபை
12ம் தேதி காலை - திருத்தேரோட்டம், இரவு குதிரை வாகனம்,
13ம் தேதி காலை - சக்கர ஸ்நானம், மாலை கொடியிறக்கம்.