பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
திருவள்ளூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, அக் 4, ஆயிரக்கணக்கானோர், திருவள்ளூர் ஹிருத்தாபாநாசினி குளத்தில், புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும், தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அமாவாசை தினத்தன்று, வீரராகவரை வணங்கினால் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் நிவர்த்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிலையில், அக் 4, மகாளய அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வீர ராகவர் கோவில் குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு, திதி கொடுத்து வணங்கினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து, வீர ராகவ பெருமாளை தரிசித்தனர். அக் 4, அதிகாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் வசதிக்காக, கோவிலில் நடை திறக்கப்பட்டிருந்தது.