பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
மோகனூர்: மஹாளய அமாவாசையான அக் 4, ஏராளமான பொதுமக்கள், காவிரி ஆற்றில், தங்கள் மூதாதையர்களுக்கு, நன்றிக்கடன் செலுத்தும் வகையில், படையல் இட்டு வழிபட்டனர்.அமாவாசையன்று, இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறுவதுடன், நாம் செய்த தவறுகள், தீயச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்கும் வகையிலும், இந்த நல்ல நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் விதமாகவும், ஒவ்வொரு அமாவாசை அன்றும், முன்னோர்களுக்கு வழிபாடு செய்கிறோம்.ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளில் இருந்து, 15 நாட்கள் வரையிலான காலக்கட்டத்தை, மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில், நமது முன்னோர்கள், மேல் உலகத்தில் இருந்து அனுமதி பெற்று, நமது வீடுகளுக்கு வருவதாக ஐதீகம்.அதன்படி, மஹாளய அமாவாசையான அக் 4, பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர். மோகனூர் காவிரிக்கரையில் கூடிய மக்கள், தர்ப்பப்பை புல்லை ஆசனமாக வைத்து, அதில் பித்ருக்களை எழுந்தருள செய்து, எள்ளும், தண்ணீர் தந்து தர்ப்பணம் செய்தனர்.நாமக்கல், மோகனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், காவிரி ஆற்றுக்கு வந்து, தங்கள் மூதாதையர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், படையல் இட்டு வழிபட்டனர்.