பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில் ஒன்றாகும். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக பக்தர்களும் இக்கோவிலுக்கு அதிகமாக வந்து செல்வர். அக் 4 மகாளய அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் கோவில், காலை ஆறு மணி பூஜைக்கே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. மதியம் நடந்த உச்சிகால பூஜையில், கோவிலை சுற்றிலும் நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தங்க கவசத்தில் பண்ணாரி மாரியம்மன் அருள்பாலித்தார்.மகாளய அமாவாசையை முன்னிட்டு, கோவில் வளாகங்களில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் அன்னதானம் வழங்கி, நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.கோவிலுக்கு முன் உள்ள குழி கம்பத்தில், கற்பூரங்கள் கொளுத்தினர். அம்மனுக்கு முத்து பல்லாக்கு எடுத்து, பஜனை நடத்தினர். மாலை, ஆறு மணி பூஜைக்குப்பின், தங்கத்தேர் இழுக்கப்பட்டது.அமாவாசையை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது.