பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
பவானி: மகாளய அமாவாசையை முன்னிட்டு, பவானி கூடுதுறை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். நூற்றுக்கணக்கானவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.ஈரோடு மாவட்டம், பவானியில், காவிரி, பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை கூடுதுறை என்பர். இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில், ஸ்ரீவேதநாயகி உடனமர் ஸ்ரீசங்கமேஸ்வர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் அருள்பாலிக்கின்றனர். இது ராமேஸ்வரத்துக்கு இணையான ஸ்தலமாகும். கூடுதுறையில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது பாக்கியம் எனக்கருதி, பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, தர்பணம் கொடுத்து செல்வர். அக் 4 மகாளய அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை, 4 மணி முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில ஆண்டுக்குப்பின், இந்தாண்டு, இரு கரை தொட்டு ஆற்றில் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் உற்சாகமாக புனித நீராடினர்.கூடுதுறை படிகட்டுகளில் காலை முதல் சூரிய வழிபாடு செய்து, வாழை இலை வைத்து, தங்கள் முன்னோர்களுக்கு, மந்திரங்கள் முழங்க தர்பணம் செய்து, காவிரி ஆற்றில் மூழ்கி, எள், பிண்டங்கள் கரைத்து, எலுமிச்சை பழங்களில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சங்கமேஸ்வரர் கோவிலில், ஸ்ரீவேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.