திருநெல்வேலி: நெல்லையில் பாண்டுரெங்க லீலை கதை உபன்யாசம் மற்றும் பஜனை நடந்தது.நெல்லை ஜங்ஷன் விவேக சம்வர்த்தினி சபாவில் ஓராண்டிற்கு திருச்சி கல்யாணராமனின் கம்ப ராமாயண தொடர் உபன்யாசமும், ஞாயிறு தோறும் காலையில் அஷ்டபதி பஜனையும் நடந்து வருகிறது. நேற்று கடலூர் கோபி பாகவதர், அவரது மகள் சுருதி ஆகியோரின் பாண்டுரெங்க லீலை கதை பஜனை சம்பிரதாயமாக பாடப்பட்டு, மக்களுக்கு புரியும் வகையில் வர்ணனையுடன் விளக்கப்பட்டது. அஷ்டபதி பஜனை, பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. கபீர்தாசர், துகாராம், நாமதேவரின் பஜனைப் பாடல்கள் பாடப்பட்டு, அதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. கோபி பாகவதர் பாண்டு ரெங்க லீலைகளை விளக்க, சுருதி பாண்டுரெங்கனாக தத்ரூபமாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். ஏற்பாடுகளை திருச்சி கல்யாணராமன் மற்றும் ராம பக்தர்கள் செய்திருந்தனர்.