பதிவு செய்த நாள்
07
அக்
2013
05:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் பன்றி புகுந்ததால், பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுதொடர்பாக, தனியார் செக்யூரிட்டி ஊழியர் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் சுற்றி திரிந்த பன்றியை, நகராட்சி ஊழியர்கள் பிடித்து வரும் நிலையில், அதிகாலை ஒரு பன்றி கோயில் கிழக்கு வாசல் வழியாக, பணியில் இருந்த துப்பாக்கி ஏந்திய போலீசாரை மீறி, கோயிலுக்குள் புகுந்தது. பின், தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் பன்றி பிடிக்க பின்னால் ஓடியதில், அது பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததால், நான்கு புறமும் பக்தர்கள் சிதறி ஓடினர். மேலும் மிரண்டு போன பன்றி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிக்குள் சென்றது. 20 நிமிடமாக செக்யூரிட்டி ஊழியருக்கு பெப்பே காட்டிய பன்றியை, ஒருவழியாக வெளியில் விரட்டினர். தமிழக சிறப்பு படை போலீசார், தனியார் செக்யூரிட்டி ஊழியர் பாதுகாப்பை மீறி, கோயிலுக்குள் அருவெறுப்புடன் புகுந்த பன்றியால், கோயில், மக்கள், ஆட்சியாளருக்கு தீங்கு ஏற்படும் என பக்தர்கள், இந்து அமைப்பினர் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். இந்நிலையில், பன்றி புகுந்த தீட்டு கழிக்க, அம்மன் சன்னதியில் பஞ்ச கவ்ய, சபன கும்ப அபிஷேகம், வாஸ்து சாந்தி பரிகார பூஜை செய்து, கோயிலுக்குள் புனித நீரை குருக்கள் தெளித்தனர். பூஜையின் போது, பக்தர்கள் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் முரளீதரன் கூறியதாவது: கோயில் பாதுகாப்பு என்ற பெயரில், உள்ளூர் மக்கள், பக்தர்களை அலைகழிக்கும் போலீசார், கோயிலுக்குள் சென்ற பன்றியை தடுக்க தவறியது, பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது. பன்றியால் ஏற்பட்ட கெட்ட சகுனம், ஆட்சியாளருக்கு தீமை ஏற்படுத்தும் என, தெரிவித்தார்.
இதுகுறித்து ராமேஸ்வரம் பிராமணர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆன்மீக முறைப்படி, கோமாதாவின் எச்சில் கூட மனிதர் மேல் படக்கூடாது. ஆனால், கோயிலுக்குள் பன்றி புகுந்தது, வாஸ்து தோஷம் ஏற்பட்டு உள்ளதுடன், மக்களுக்கும், ராஜாங்கத்தை (தமிழகம்) ஆளும் தலைவருக்கும், ஊருக்கும்(ராமேஸ்வரம்) தீங்கு ஏற்படும். தற்போது கோயிலில் சம்பிரோக்சனம், வாஸ்து சாந்தி பூஜை செய்து, பரிகாரம் செய்திருப்பர். ஆனால் மக்கள், ஆட்சியாளருக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க, ஆன்மீக பெரியோர் மூலம் ஜோசியம், பிரஸ்ணம்(சோளி உருட்டுதல்) பார்த்து, அதில் கூறும் பரிகாரத்தை நிறைவேற்றிட, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தார்.
இதுகுறித்து கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: பன்றி புகுந்த தீட்டு கழிக்க, அம்மன் சன்னதியில் பரிகார அபிஷேகம், பூஜை செய்த பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்த தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக, தெரிவித்தார்.