பதிவு செய்த நாள்
08
அக்
2013
10:10
சென்னை: சென்னை, தரமணியில், திருக்குறள் ஓவியக்கூடம் அமைக்கவும், மதுரையில், சங்கத்தமிழ் காட்சிக்கூடம் அமைக்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். திருக்குறளில் உள்ள, அரிய வாழ்வியல் கருத்துக்களை, எளிய நடையில், பொதுமக்களை சென்றடையும் வகையில், காட்சிப்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, சென்னை தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாயில், சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய, திருக்குறள் ஓவிய காட்சிக்கூடம் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதில், திருக்குறளை விளக்கும் ஓவியங்களை காட்சிப்படுத்தல்; ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்து காட்சிப்படுத்தல்; உரைநடை வடிவில் உள்ள திருக்குறள் நூல்களை சேகரித்து காட்சிப்படுத்தல்; திருக்குறள் தொடர்பான படக்காட்சிகள், குறும்படங்கள், உயிரூட்டு படங்கள், ஆகியவற்றை சேகரித்து காட்சிப்படுத்தல் போன்றவை செயல்படுத்தப்படும்.
தகவல் மையம்: அதேபோல், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும், தொல்காப்பியத்தை நினைவு கூறும் வகையில், தொல்காப்பியர் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டு நாள் தேசிய கருத்தரங்கமும், ஆண்டுக்கு ஒருமுறை பன்னாட்டு கருத்தரங்கமும், தொல்காப்பிய இலக்கணம் குறித்து, மாணவர்களுக்கு, 10 நாட்கள் புத்தொளிப் பயிற்சியும் அளிக்கப்படும்.
காட்சிக் கூடம்: பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும், இன்றைய தலைமுறையினர் கண்டு பெருமை கொள்ளும் வகையில், சங்கத் தமிழ் பாடல்களை, ஓவியங்களாகவும், வீடியோ காட்சிகளாகவும், அசைவுப் படங்களாகவும், எழிலார்ந்த சிற்பங்களாகவும், காட்சிப்படுத்த, நிரந்தர சங்கத்தமிழ் காட்சிக்கூடம், 75 லட்சம் ரூபாய் செலவில், மதுரை அரசு அருங்காட்சியகம் எதிரில், 58 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைக்கப்படும். இக்கூடத்தில், எந்தெந்த இலக்கிய காட்சிகளை ஓவியங்களாகவும், படைப்பு சிற்பங்களாகவும், சிற்ப காட்சிகளாகவும் அமைக்கலாம், என்பதை தேர்வு செய்ய, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலர் தலைமையில், ஒரு குழு அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.