குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசுத் திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2013 10:10
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் நாளை (9ம் தேதி) ஐப்பசி விசுத் திருவிழா துவங்குகிறது. குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி விசுத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு இத்திருவிழா நாளை (9ம் தேதி) துவங்கி வரும் 18ம் தேதி வரைதொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து இலஞ்சி குமரன் வருகையும், மாலையில் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் பவனியும் நடக்கிறது. 10ம் தேதி காலை வெள்ளி சப்பரத்தில் இலஞ்சி குமரன் பவனியும், சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் காட்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி பஞ்மூர்த்திகள் புறப்பாடும், 13ம் தேதி நான்கு திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல், 15ம் தேதி நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.