பதிவு செய்த நாள்
08
அக்
2013
10:10
அவிநாசி: ஆயுத பூஜைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், பொரி உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஆயுத பூஜையும் ஒன்று. அன்றைய தினம், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், இயந்திரங்களை சுத்தம் செய்வர். பூஜையில், பொரி, கடலை படைக்கப்படும். எனவே, ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே, பொரி உற்பத்தி தீவிரப்படுத்தப்படும்.அவிநாசியில், கங்கவர் வீதி, கஸ்தூரிபாவீதி, செல்லாண்டியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதியில் 35க்கும் மேற்பட்ட பொரி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கிருந்து, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பொரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆயுத பூஜைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், பொரி உற்பத்தி தீவிரமாகியுள்ளது.அவிநாசியை சேர்ந்த பொரி உற்பத்தியாளர் தேவராஜன் கூறியதாவது:மூலப் பொருளான நெல், மைசூரில் இருந்தும், மேற்குவங்க மாநிலத்திலிருந்து கோ-64 ரக அரிசியை நேரடியாக கொள்முதல் செய்து, பொரி உற்பத்தி செய்கிறோம். பெரியளவில் தொழிற்சாலைகள் வந்து விட்டதால், சிறியளவில் உற்பத்தி செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால், ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. கடந்தாண்டு திருப்பூர் பனியன் தொழில் துறை மந்தமாக இருந்ததால், விற்பனை சரியில்லை. இந்தாண்டு ஆர்டர் கொஞ்சம் பரவாயில்லை. கடந்த ஒரு மாதமாக பொரி உற்பத்தி செய்து வருகிறோம். இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால், இரவு, பகலாக உற்பத்தி நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.