பதிவு செய்த நாள்
08
அக்
2013
11:10
ராசிபுரம்: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அக்டோபர், 22ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ராசிபுரத்தில், செல்லியாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேர் திருவிழா ஐப்பசி மாதம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா, அக்டோபர், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று இரவு, 7 மணிக்கு, மாரியம்மன் ஸ்வாமி, கைலாசநாதர் கோவிலில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து செல்லியாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் ஸ்வாமிக்கு பூச்சாட்டு விழா நடக்கிறது. அக்டோபர், 23ம் தேதி முதல், தினமும், இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்டோபர், 24ம் தேதி, இரவு, 9 மணிக்கு, கம்பம் நடும் விழா நடக்கிறது. நவம்பர், 4ம் தேதி, இரவு, 12 மணிக்கு, பூவோடு பற்ற வைத்தல், 5ம் தேதி, பூவோடு எடுத்தல், 6ம் தேதி, காலை, அம்மை அழைத்தல் மற்றும் பொங்கல் வைத்தல், இரவு, 10 மணிக்கு, அக்னி குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர், 7ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு, பக்தர்கள் தீ குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று காலை, 8 மணிக்கு, ஸ்வாமி திருத்தேரில் எழுந்துருளி, திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை, 4 மணிக்கு, திருத்தேர் இழுத்தல், நவம்பர், 8ம் தேதி, வண்டி வேடிக்கை, 9ம் தேதி இரவு, புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா வந்து சத்தாபரணம் நடக்கிறது. 10ம் தேதி, மஞ்சள் நீராடல், 11ம் தேதி முதல், 21ம் தேதி வரை, விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் உமாதேவி, செயல் அலுவலர் ராஜாராம், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.