பதிவு செய்த நாள்
23
அக்
2013
10:10
இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில், 60 ஆண்டுகளாக, நடத்தப்படும், கிளப்பில் மதுவிடுதி செயல்படுகிறது. அறநிலைய துறை சட்டத்திற்கு விரோதமாக, மதுவிடுதியை அனுமதித்தது எப்படி என, பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மயிலாப்பூரில் உள்ள, கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, லஸ் கார்னரில், காமதேனு திரை அரங்குக்கு எதிரே, பல ஏக்கர் பரப்புள்ள நிலம் உள்ளது. அதில், 1903 முதல், மயிலாப்பூர் கிளப் செயல்படுகிறது. சென்னையில் உள்ள, பெரும் பணக்காரர்கள் அதில், உறுப்பினர்களாக உள்ளனர். அங்கு, விளையாட்டு திடலும், பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. அதேபோல், கிளப்பின் உறுப்பினர்களுக்கு மட்டும் செயல்படும், மதுவிடுதியும் உள்ளது. கிளப் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, மது விடுதியும் செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் கிளப்பிற்கு, கோவில் நிலத்தை வாடகைக்கு விடும் போது கூட, கிளப்பில், சூதாட்டம், மது, இறைச்சி போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த உத்தரவு, இது வரை பின்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கூட, கோவில்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், இடங்களில், நாத்திகவாதிகள் நடத்தும் நிகழ்ச்சிகள், மது, இறைச்சி பயன்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என, உத்தரவு பிறப்பித்த அறநிலைய துறை, கடந்த, 60 ஆண்டுகளாக, கோவில் நிலத்தில், மதுவிடுதி செயல்பட்டு வருவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏன் என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து, விளக்கம் கேட்க முயன்ற போது, அறநிலைய துறை அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
- நமது நிருபர் -