பதிவு செய்த நாள்
26
அக்
2013
10:10
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதிய தேர் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் துவங்கி உள்ளது. ஜம்புலிபுத்தார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதியதேர் செய்யும் பணி ரூ.17 லட்சம் செலவில் 2005ல் துவங்கியது. மதுரை மீனாட்சி கோயில் நிதியில் ரூ.17 லட்சம் செலவில் இக்கோயிலுக்கான தேர் செய்யும் பணி முடிந்தது. திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு இரும்பு சக்கரங்கள் தேரில் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தேர் 27 அடி உயரம், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில் கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், கோண அடுக்கான 2ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3ம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், 4ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேருக்கான இறுதி கட்டப்பணிகளை விரைவில் முடிக்க, அறநிலையத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு, மார்ச் 29ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.பெயின்டிங் வேலைகள் துவங்காததால், கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த சில மாதங்களாக தேரின் இறுதிக்கட்ட பணிகளை முடிக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது பணிகள் மீண்டும் துவங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் தேரின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து தேர் பாதுகாப்பாக நிறுத்தப்படும், என்று இந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.