திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல உற்சவத்தை முன்னிட்டு மணவாள மாமுனிகள் அம்சவாகனத்தில் எழுந்தருளினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல உற்சவம் நேற்று துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு மணவாள மாமுனிகள் தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளி தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி, வேணுகோபாலன் சன்னதிகளில் மங்களாசாசனம் நடந்தது. 11 மணிக்கு, வேணுகோபாலன் சன்னதியில், மணவாள மாமுனிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமறை, நான்காயிர திவ்யபிரபந்த துவக்கம் நடந்தது. மாலை 5 மணிக்கு மாமுனிகள் அம்சவாகனத்தில் எழுந்தருளி சன்னதி வீதி புறப்பாடு நடந்தது. கோவிலை அடைந்தவுடன் வாகன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.