பதிவு செய்த நாள்
04
நவ
2013
11:11
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, மலை மீது டி.ஐ.ஜி., முருகன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, நகர எல்லை காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. வரும், 8ம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. வரும், 14ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா, தேரோட்டம் நடக்க உள்ளது. 17ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதி செய்வது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி., முருகன் (பொறுப்பு), மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., சரவணன குமார், கணேசன், உள்பட, 40 போலீஸார் உடன் சென்றனர். பக்தர்களுக்கு உதவ, கமாண்டோ படை வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், போலீஸார் தீயணைப்பு வீரர், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரை எங்கெங்கு நியமிப்பது என்றும், ஜெனரேட்டர் மூலம் மின் வசதி செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.