பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
பெரியகுளம் : பிரசித்திப்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், ராஜகோபுரம் கட்டும் பணிக்காக, தரைத்தளம் 10 அடி தோண்டப்பட்டுள்ளது. திருப்பணி வேலைகள், "ஜருராக நடந்து வருகிறது. பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், சைவம் வளர்த்த தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில். வராகநதியின் தென்கரையில் அமைந்துள்ளது. சோழமன்னான ராஜேந்திரசோழானால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலில் கட்டட அமைப்பில் எந்த கோயிலிலும் இல்லாதபடி, சுப்பிரமணியர் (முருகன்), ராஜேந்திரசோழீஸ்வரர் (சிவன்), அறம்வளர்த்த நாயகி (அம்பாள்) ஆகிய மூன்று சந்நிதிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சந்நிதிக்கும் ஒரு கொடிமரமாக மூன்று கொடி மரங்கள் உள்ளன. உத்திரபிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற் போல், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி கரையோரங்களில் எதிர், எதிராக ஆண்மருதமரம், பெண்மருதமரம் அமைந்துள்ளன. இதன் நடுவில் குளிப்பவர்களுக்கு சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கோயில் தென்வடல் 191 அடியும் கிழமேல் 222 அடியும் கொண்ட பரந்த இப்பெருங்கோயிலில் அதிகார நந்தி சந்நிதி துவங்கி சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை 27 சந்நிதிகளும், மண்டபங்களும் உள்ளன. கோயிலுக்கு மூன்று கால நித்தியபடி பூஜை நடந்து வருகிறது. வராலாற்று சிறப்புமிக்க கோயிலில், ராஜகோபுரம் கட்டுவதற்கும், கோயிலுக்கும் புதிதாக கன்னிமூல கணபதி கோயில் மற்றும் கட்டுமானப்பணிக்கும் நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பணிகள் துவங்கியது. ராஜகோபுரம் கட்டுவதற்கு முதல்கட்டமாக சில தினங்களுக்கு முன், தரைத்தளத்தில் 10 அடியில் பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கட்டுமானப்பணிக்கு, மேல் 22 அடி கல்கட்டடம் அமைக்கப்படும், அதற்கு மேலாக, 50 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. ஸ்தபதி விநாயகமூர்த்தி, திருப்பணிக்குழு தலைவர் சசிதரன், உறுப்பினர் பி.சி.சிதம்பரசூரியவேலு மற்றும் உறுப்பினர்கள் மேற்பார்வையில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நுழைவு பாதையில் கட்டுமானப்பணி நடப்பதால், கோயிலில் இடது பக்கத்திலிருந்து கோயிலுக்குள் செல்வதற்கு மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.