தேவலோகத்தில் நந்தவனத்தைக் காவல் காக்கும் பொருட்டு, சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் இவர். அங்கு சப்த கன்னிகள் நீராட வருகிறார்கள். அப்போது சப்த கன்னிகளில் ஒருத்தியான ஆரியமாலா மீது மையல் கொள்கிறார் இவர். சப்த கன்னிகள் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். பெண்ணாசையினால் நீ இந்தத் தவறினைச் செய்துவிட்டாய். பூவுலகில் மானிடனாகப் பிறந்து பெண்ணாசையினால் தண்டனை பெற்று, கழுவேற்றம் ஆகி தேவலோகம் திரும்பு எனச் சாபமளிக்கிறார் சிவபெருமான் என்பது புராணக் கதை.
அதன்படியே, பூமியில் பிறந்து மன்னன் மகளான ஆரியமாலாவின் மீது மையல் கொண்டு, பிடிபட்டு, கழுவேற்றப்படுகிறான் காத்தவராயன். கருணை உள்ளம் கொண்டவன் இறைவன். அவனே ஈர நெஞ்சினன். கழுவேற்ற மரத்தின் உச்சியில் நின்றிருந்த காத்தவராயனையும், ஆரியமாலா, நல்லதங்கை உட்பட சப்தகன்னிகளையும் அவன் தேவலோகத்துக்கு அழைத்துக் கொள்கிறான்.