பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
கோவில்களில், நம் நாட்டின் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வண்ணம், அறநிலையத் துறை அதிகாரிகள் வேட்டி கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும், 39 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர், பூசாரி, பாரம்பரிய உடையான வேட்டி கட்ட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே போல், கோவில்களை நிர்வகிக்கும், அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும், வேட்டி அணிந்து வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: நம் நாட்டின் பாரம்பரிய வழக்கங்கள், கோவில்களில் தான் உள்ளன. நம் நாட்டின் பழக்க வழக்கங்களை அறிய வரும் வெளிநாட்டினர், முதலில் கோவில்களுக்குச் செல்லவே முக்கியத்துவம் அளிப்பர். இந்நிலையில், கோவில்களை நிர்வகித்து வரும் அறநிலையத் துறை அதிகாரிகளே, பேன்ட், சட்டை அணிந்து இருப்பது, தவறானது. பெண் அதிகாரிகள், சேலை அணிந்து வருகின்றனர். ஆனால், ஆண் அதிகாரிகள், அதை கடைபிடிப்பதில்லை. இது, மேற்கத்திய நாகரிகம் மீதான, கவர்ச்சி தான் இதற்குக் காரணம். எனவே, அறநிலையத் துறை அதிகாரிகள், இனிமேல், வேட்டி, சட்டை தான் அணிய வேண்டும். அதே போல், கோவில்களுக்கு வெளிநாட்டினர் வரும்போது, கடைபிடிக்க வேண்டிய உடைக் கட்டுப்பாடுகளையும், தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -