சபரிமலையில் பிளாஸ்டிக் தடை முக்கியம்: சுற்றுச்சூழல் கமிட்டி அரசுக்கு பரிந்துரை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 04:11
சபரிமலை: சபரிமலையில் பிளாஸ்டிக் தடை மிகவும் முக்கியமானது என்றும் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. சி.பி. முகம்மது தலைமையிலான மூன்று பேர் கொண்ட சட்டசபை சுற்றுச்சூழல் குழு பம்பை மற்றும் சன்னிதானத்தில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பம்பை மற்றும் சன்னிதானத்தை குப்பைகளில் இருந்து விடுவிக்க பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட பசுமைப்படை அமைக்க வேண்டும். காட்டின் நடுவில் அமைந்துள்ள பாதையில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சபரிமலையில் முக்கிய பிரச்னையாக உள்ளது பிளாஸ்டிக் குப்பிகளின் குவியல்தான். குடிநீருக்காக உபயோகப்படுத்தும் பாட்டில்களால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதை குறைக்க வேண்டுமெனில் தேவசம்போர்டு பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். சபரிமலையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை. இதனால் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சன்னிதானத்திலிருந்து கழிவு நீர் பம்பையில் கலப்பதை தடுக்க உடனடியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். காட்டின் நடுவில் அமைந்துள்ள கோயில் என்பதை பக்தர்களுக்கு விளக்கி, அதை பாதுகாக்க வேண்டிய கடமை பற்றி பக்தர்களுக்கு விளக்க வேண்டும். சபரிமலையில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறீனார். உறுப்பினர்கள் ரெத்தினாகரன், ஆரிப் ஆகியோர் உடனிருந்தனர்.