திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2013 10:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் நேற்று துவங்கியது. இக்கோயிலில் நேற்றிரவு மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு பூஜைகள் முடிந்து திருமுறை பாடப்பட்டது. பல்லக்கில் மாணிக்கவாசகர் கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சார்யார்களால் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டது. ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டன. இந்நிகழ்ச்சி டிச., 16 வரை நடக்கும்.டிச., 17 காலையில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவல நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடக்கும். டிச., 18 ஆருத்திர தரிசனத்தையொட்டி, அதிகாலை மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைலக் காப்பு சாத்துப்படியாகி, உற்சவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தனித்தனி பூ சப்பரத்தில் சுவாமி, அம்மன் கிரிவலம் செல்வர்.