பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
திருப்பதி: தபால் மூலம், திருமலை ஏழுமலையானுக்கு காணிக்கை அனுப்பி, ஆசீர ?வாதம் பெறும் திட்டம், மீண்டும் துவக்கப்பட உள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், தபால் மூலம் அனுப்பும் திட்டம், நான்காண்டுகளுக்கு முன், அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில், மணியார்டர் அனுப்பும் பக்தர்களுக்கு, ஏழுமலையானின் திருவுருவ படமும், கல்யாண உற்சவ அட்சதையும், சிறு கவரில் அனுப்பி வைக்கப்படும். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த திட்டம், மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையே, திருப்பதிக்கு, அரசு பஸ் மூலம், பக்தர்கள் வருவது குறைந்துள்ளதால், போக்குவரத்து கழகத்திற்கு, வருவாய் குறைந்துள்ளது. தெலுங்கானா மாநில விவகாரத்தால், ஆந்திராவில் போராட்டம் நடைபெற்று வருவதால், ஆந்திர அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அவ்வப்போது நிறுத்தப்படுகின்றன. இதனால், சென்னையில் இருந்து, திருப்பதிக்கு பஸ் பயணத்தை, பெரும்பாலான பக்தர்கள், குறைத்துக் கொண்டனர்.
இது குறித்து, ஆந்திர மாநில போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருப்பதிக்கு, தினசரி, 80 பஸ்களை இயக்கினாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. முன், தினசரி வருவாய், 5 - 6.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும். தற்போது, 3 - 4 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. தினசரி, 40 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.