பதிவு செய்த நாள்
21
ஜன
2014
11:01
சாதனையின் முன்னேற்றப் படிகள்
பாடல் வருமாறு;
பண்ணிநின்றவுடலாகு முயிர்தானாகும்
பகருகின்ற பொருளாகுவுற்றாராரு
நண்ணிநின்ற குருவாரு பரந்தானாரு
நலமானவகார மாறும்பாரு
கண்ணில்நின்றவொளிபாரு வெளியைப்பாரு
காலடங்கிவாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில்நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி
வேதாந்தசித்தாந்த மிரண்டும்பாரே (5)
ஆறிமுகவுரை: சென்ற பாடலில் பிரணாயாம பயிற்சி பற்றி கூறி, அத்தகைய வித்தையினை உனக்கு தந்த குருவிற்கு உடல், பொருள் ஆவியினை தத்தம் செய்ய என்ன ஆகும் என்பதனை இந்த பாடலில் கூறுகிறார்.
பொருள் உரை: பண்ணிநின்றவுடலாகு முயிர்தானாகும்: மேற்குறிப்பிட்ட பாடலின் படி சாதனை செய்து, (குருவிற்கு தனது உடல் பொருள் ஆவி தத்தம் செய்து பரிபூரண சரணாகதி அடைந்த சீடனிற்கு) உடலுக்குள் இருக்கும் உயிரான ஆன்மாவினை அறியும் நிலை கிட்டும், தன்னையறியும் நிலை அடைவான்.
பகருகின்ற பொருளாகு(ம்)(உ)வுற்றாராரு:இப்படி தன்னையறிந்த சாதகனுக்கு இவ்வுலகில் பொருட்கள் மீதோ, உற்றார் உறவினர்களது மீதோ உள்ள பந்தத்தினை விலக்கி பற்றற்ற நிலை அடையும் , அதாவது தான் உடலால் சூழப்பட்ட ஆன்மா என்ற பொருள் அறிந்தவன் உலக பொருட்களின் மீது உற்றாருடனானபற்றினை நீக்கும் வழி அறிவான்.
நண்ணிநின்ற குருவாரு பரந்தானாரு: தன்னையறிந்த நிலையடைந்தவனுக்கு தனக்கு நன்மை (நண்ணி) செய்த குரு யார்? அதற்கு மேல் உள்ள இறைவன் (பரம்)யார்? என்பதினை அறிவான்.
நலமானவகார மாறும்பாரு: வகாரம் என்பது நமசிவாயஎனும் பஞ்சாட்சரத்தில் நான்காவது எழுத்து, சூஷ்மஉடலில் அநாகதசக்கரத்தினை குறிக்கும், வகாரமாறுதல் என்பது அநாகதசக்கரவிழிப்பினை குறிக்கும்.
கண்ணில்நின்றவொளிபாரு வெளியைப்பாரு: உடலில் உள்ளஉறுப்புகளில் பிரகாசமாகமிளிரக்கூடியது கண்கள், கண்கள் தெய்வசக்தியினை ஈர்க்கக்கூடியவை, அதேபோல் வெளிப்படுத்தக் கூடியவை. மனதினை ஒருமைப்படுத்த இலகுவாக உபயோகிக்ககூடியஉறுப்பு கண்கள். கண்ணினை மூடி தியானசாதனை செய்யும் போது முன்னேறியநிலையில் ஒளி தென்படஆரம்பிக்கும். அந்தவொளியில் மனதினை செலுத்தி மனங்கடந்தநிலையில் வெட்டவெளியானதூரியாதீதநிலையினை மனம் அடையும். அதாவது கடவுளுடன் இரண்டறகலந்தநிலை!
காலடங்கிவாடுகின்ற கருவைப்பாரு: கால் என்பது மூச்சு அல்லது பிராணன், இது அடங்கினால் கரு எனப்படும் உடல் வாடிவிடும், மேற்குறித்ததன்னையறிந்தநிலை அடையும் போது பிராணன் இலாவிட்டால் அழியும் உடல் பற்றியசூட்சுமம் புரிந்து விடும்.
விண்ணில்நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி: விண் என்பது சூஷ்ம உடலில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தினை குறிக்கும், பொதுவாக குருவை தியானிக்கும் போது அவரது பாதுகைகளை சஹஸ்ராரத்தில் இருத்தி தியானித்தல் மரபு, இதன் முக்கியத்துவம் என்னவென்றால் இந்த சக்கரத்தில் பதிப்பிக்கும் எதுவும் உடல் பூராகவும் பரவும் தன்மையுடையது. ஆகவே ஞானமடைந்த குருவை தியானிக்கும் போது அந்த ஆற்றல் சகஸ்ரார சக்கரத்தினூடாக எமது சூஷ்ம உடலில் பரவும். குருவுடன் நித்தமும் இந்த சக்கரத்தின் மூலம் தொடர்பில் இருக்கும் சாதகனுக்கு அனைத்து யோக இரகசியங்களினதும் பொருளினை குரு விளக்குவார் என்ற சூட்சுமமும் இதில் விளக்குகிறார்.
வேதாந்தசித்தாந்த மிரண்டும்பாரே: வேதாந்த கோட்பாடுகள் பற்றி தத்துவவாதிகள் பல விடயங்களை விளக்கி கூறியுள்ளனர், சுவாமி விவேகானந்தரின் ஞான யோகம் வேதாந்த தத்துவங்களை விளக்கும் அரிய நூல். வேதாந்தத்தின் பயன் என்னவென்றால் தன்னை அறிந்து தலைவனை அறியும் பாதையில் சாதகனுக்கு தேவையான கோட்பாட்டறிவினை தரும். அதாவது ஆன்மா, ஆன்மாவினை சூழவுள்ள மாயை, அந்த மாயை செயல்படும் வழிகள் போன்ற ஞானத்தினை தரும். இது சாதனை பாதையில் முன்னேற நினைக்கும் சாதகர்களுக்கு முக்கியமான ஒரு அங்கமாகும்.
அதுபோல் சித்தாந்தம் பதி (இறைவன்) பசு (ஆன்மா) பாசம் (மலங்கள்) என கோட்பாட்டறிவை பிரயோகிக்கும் அறிவினை தரும், ஆகவே ஆன்ம சாதனையில் முன்னேற விரும்பும் சாதகன் வேதாந்த சித்தாந்த அறிவினை நன்கு பெற்றிருப்பது அவசியம் எனபதனை வலியுறுத்துவதற்காகவே இரண்டையும் பார்க்கும் படி வலியுறுத்துகிரார்.
ஆக இந்த பாடலின் உபதேசம் பிரணாயாமத்தினாலும் குருவிடம் சரணாகதி அடைவதாலும் ஏற்படும் பயன்கள் பற்றியும், அதன் பயனாக மேலும் தன்னை முன்னேற்றிக்கொள்ள தகுந்த கோட்பாட்டறிவு பெற வேதாந்த சித்தாந்தம் பற்றி அறிந்து கொள்ளும் படி கூறுகிறார்.
சித்தவித்யா விளக்கவுரை: சாதகன் பிரணாயாமம் செய்யத்தொடங்கும் போது பிரணமய கோசத்தினையும் பின் கும்பகபிரணாயாமத்தில் ஆன்மாவினை மனதிலிருந்து பிரித்து பரிபூரண விழிப்பு நிலையான தூரிய நிலையினையும் அடைகின்றான். இது பற்றி கும்பகபிரணாயாமத்தின் அவசியம் என்ற பதிவில் விளக்கியுள்ளோம். இந்த நிலையினை அடையும் போது அவனது "நான்" எனும் அகங்காரம் வலுப் பெறத்தொடங்கும், ஏனெனில் சாதனையில் மன, பிராண ஆற்றல்கள் அதிகமாகி விடுவதால் தவறான வழியில் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். அந்த அகங்காரத்தினை தூய்மைப்படுத்தி மேலும் முன்னேறுவதற்கு குருவை பணியும் படி வலியுறுத்துகிறார். அப்படி பணிந்து அகங்காரம் தூய்மையான சாதகன் பெறும் முன்னேற்றத்தினையே இந்த பாடலில் விபரிக்கின்றார். ஒரு வித்தையில் முன்னேறும் போது தகுந்த கோட்பாட்டறிவு அவசியம் என்பதால் வேதாந்த சித்தாந்தம் இரண்டையும் கற்கும் படி கூறுகிறார்.
சாதனை: தன்னையறியும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் வேதாந்த சிந்தாந்த கோட்பாடுகளை கற்று ஆன்மா, மனம், பிராணன், பஞ்சகோசங்கள், மாயை பற்றிய அறிவினை பெற்றிருத்தல் அவசியம். ஆகவே சாதனை புரிய விரும்பும் மாணவர்கள் ஆன்மாவினை சூழ உள்ள கவசங்களைப் பற்றி கற்றல் வேண்டும்.
ஸத் குருபாதம் போற்றி
நன்றி: சுமனன் – சித்த வித்யா விஞ்ஞானம்