பதிவு செய்த நாள்
31
ஜன
2014
11:01
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் இரண்டு லட்சம் பக்தர்கள் குவிந்ததால் ஒரு மணி நேரம் முன்னதாக ஊஞ்சல் உற்சவத்தை துவக்கினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். தை அமாவாசை என்பதால் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரவு 9 மணியளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை ஒரு மணி நேரம் முன்னதாக 11 மணிக்கு துவங்கினர். நள்ளிரவு 12.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் ஏழுந்தருளியதும், கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இதில் விழுப்புரம் எம்.பி., ஆனந்தன், இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அனுசுயா தேவி, தாசில்தார் புண்ணியகோட்டி, அறங்காவலர் தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.