பதிவு செய்த நாள்
06
பிப்
2014
10:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் கோவில். இங்கு காமாட்சியம்மன் சாந்தசொரூபமாக, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அம்மன் முன்புள்ள ஸ்ரீசக்கரத்தை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும். அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, ஆதிசங்கரர் இங்கு ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரருக்கு பிரகாரத்தில் சன்னதி உள்ளது.
ஸ்ரீ சக்கரம் சிறப்புகள்: காமாட்சியம்மன்முன்புள்ள ஸ்ரீசக்கரத்திற்கு, தினமும் முதல் பூஜை நடக்கிறது. பிரம்மோற்சவம், நவராத்திரி காலங்களில் அம்பாளுக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்ரீசக்கரத்திற்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. பவுர்ணமி அன்று இரவு 10:30 மணிக்கு மேல், அம்பாள் சன்னிதியில், ஸ்ரீசக்கரத்திற்கு, நவ ஆவரண பூஜை செய்யப்படும். இவ்வேளையில் அம்பாளையும்,ஸ்ரீசக்கரத்தையும் தரிசனம் செய்வது விஷேச பலன் தரும். பூஜையின் போது தீர்த்த பிரசாதம் தருகின்றனர்.
கொடியேற்றம்: காமாட்சியம்மன் கோவிலில், வழக்கம்போல் இந்த ஆண்டும் மாசி மாத பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று இரவு பிரம்மோற்சவத்தின் துவக்கமாக, அங்குசார்ப்பணம், விநாயகர் உற்சவம் நடந்தது. இன்று காலை 5:05 மணிக்கு, கோவில் நுழைவு வாயிலில் உள்ள கொடிமரத்தில், காமாட்சியம்மன் படம் பொறித்த கொடியேற்றப்பட்டது. கொடிமரம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடியேற்றத்தையொட்டி, சிறப்பு ஹோமங்கள் நடந்தன. காலை 7:30 மணிக்கு, உற்சவர் காமாட்சியம்மன், சரஸ்வதி மற்றும் லட்சுமியுடன், விருஷபம் வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.