பதிவு செய்த நாள்
13
பிப்
2014
11:02
திருத்தணி : திருத்தணி கமல விநாயகர் கோவிலில், நேற்று நடந்த, கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருத்தணி, அக்கைய்யா சாலை, வாட்டர் டேங்க் பகுதியில், கமல விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், திருப்பணிகள், ஐந்து லட்சம் செலவில் நடந்தன. மேலும், நவகிரக சிலைகளும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை ஓட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாக சாலை, 21 கலசங்கள் அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம் மற்றும் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் விநாயகர் மற்றும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.