பதிவு செய்த நாள்
13
பிப்
2014
11:02
கரூர்: "சூடாமணி மாசாணியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு பூக்குழி (குண்டம்) விழா வரும் 15ம் தேதி நடக்கிறது. பூக்குழி இறங்க விரும்பும் பக்தர்கள் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கோவில் விழாக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே சூடாமணியில் உள்ள மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பூஜைகள், வாரத்தில் முக்கிய விரதநாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய விரதநாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா நடந்து வருவது வழக்கம். இந்தாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த, 30ம்தேதி தை அமாவாசையன்று அம்மனுக்கு கங்கணம் கட்டுதல் கட்டப்பட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து கம்பம் முளைப்பாரி இடப்பட்டு, நாள்தோறும் மாலை வழிபாடு நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (குண்டம்) விழாவிற்கு பக்தர்கள் கங்கணம் கட்டிக் கொள்ள நேற்றுகடைசி நாள் என்று கோவில் விழா குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, கரகம் பாலிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு மாசாணியம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. வரும், 14ம் தேதி அம்மனுக்கு நகை மற்றும் அலங்காரப் பொருள்களை மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு பூக்குழி குண்டம் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது. வரும், 15ம்தேதி காலை எல்லைமேட்டில் இருந்து அக்னி கரகம், பெண்கள் அக்னிசட்டி எடுத்து வந்து கோவிலை வந்தடைந்து, பூக்குழியில் இறங்கி பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்ற உள்ளனர். ஏற்பாடுகளை ஸ்ரீமாசாணியம்மன் அறக்கட்டளை மற்றும் கதர்மங்கலம் எல்லைமேடு ஊர்பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.