பதிவு செய்த நாள்
14
பிப்
2014
12:02
நகரி: விஜயகணபதி கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, கே.வி.பி.ஆர்.,பேட்டை கிராமத்தில், விஜயகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாக சாலை, 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், சாந்தி பூஜை உட்பட நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது, கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு உற்சவர் விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.