தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் தாம் அருளிய திருமுறையின் முதல் பாடலாக, பித்தா! பிறைசூடி பெருமானே என்று இறைவனைப் பித்தன் என்கிறார். என்னதான் தம்பிரன் தோழர் என்றாலும், அவர் இறைவனை அப்படி அழைத்தது சரியா? இப்படி ஒரு கேள்வி மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் முன்னிலையில் எழுந்தபோது, பித்தன் பெயர்க் காரணத்தை நகைச்சுவை இழையோட, அவர் ஒரு பாடலின் மூலம் அழகாக விளக்கினார்.
அந்தப் பாடல்: அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை அணியுருப் பாதியில் வைத்தான் தளர்பிழை மூன்றே பொறுப்பவள்தன்னை சடைமூடி வைத்தனன் அதனால் பிளவியல் மதியம் சூடிய பெருமான் பித்தன் என்றொரு பெயர் பெற்றான்
அம்பிகையிடம் சொல்வது போல் அமைந்த இந்தப் பாடலின் பொருள்: தாயே! அளவற்ற பிழைகள் பொறுக்கும் உன்னைத் தன் திரு உருவில் பாதியாக வைத்தான். ஆனால், தவறித் தன்னில் விழுந்த ஒருவனை மூன்று முறையே பொறுக்கும் கங்கையைத் தன் தலைமேல் வைத்து ஆடுகிறான். அதனால்தான். பிளந்தது போன்ற இளம் சந்திரனைச் சூடிய பெருமான் பித்தன் என்பதாக ஒரு பெயர் பெற்றான்!