பதிவு செய்த நாள்
05
மார்
2014
11:03
விருத்தாசலம் : விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் சந்தைதோப்பு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், கடந்த 23ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை விநாயகர், அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரன், பாவாடைராயன், காட்டேரி அம்மன், பேச்சாயி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது. நேற்று செடல் உற்சவத்தையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 9:00 மணியளவில் மணிமுக்தாற்றில் சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி, செடல் அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீர் உற்சவம், இரவு பாரதமாதா அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.