பதிவு செய்த நாள்
07
மார்
2014
12:03
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள கிராமங்களில், பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதியுலா வந்தபோது, பக்தர்கள் தரையில் படுத்து வணங்கினர். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், கடந்த, மூன்றாம் தேதி இரவு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் இந்தாண்டுக்கான, குண்டம் விழா துவங்கியது. நான்காம் தேதி இரவு, பத்து மணிக்கு, பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் புறப்பட்டு, சிக்கரசம்பாளையம் வந்தது. அப்பகுதியில் உள்ள கிராமங்களில், நேற்று முன்தினம் முழுவதும், வீதியுலா சென்றது. அப்போ து, பக்தர்கள் "மாரியம்மா என கோ ஷமிட்டு, சப்பரத்தில் வந்த மாரியம்மனுக்கு, தண்ணீர் ஊற்றி, தேங்காய், பழம் வைத்து வணங்கினர். பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் தரையில் படுத்து, வணங்கினர். மாலையில், சிக்கரம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, இரவில், புதூர் மாரியம்மன் கோவிலில் சப்பரத்துடன் தங்கினர். நேற்று வெள்ளியம்பாளையத்தில் வீதியுலா சென்றது. இதை முடித்துவிட்டு, மாலையில், கொத்தமங்கலம் வழியாக, இரவில் தொட்டம்பாளையம் சென்றது. பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதி உலா செல்லும்போது, மலைவாழ் மக்கள், பீனாச்சி வாத்தியம் மற்றும் தாரை, தப்பட்டையுடன், சப்பரத்தின் முன்னால் சென்றனர். இன்று, வெள்ளியம்பாளையம் புதூர் கிராமத்தில், ஒவ்வொரு வீதியாக சென்றுவிட்டு, இரவில் அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்குகிறார்.