பதிவு செய்த நாள்
07
மார்
2014
12:03
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள அரியப்பம்பாளையம், ஸ்ரீசெல்லாண்டியம்மன், ஸ்ரீகாமாட்சியம்மன் மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில், குண்டம் விழா நிகழ்ச்சி, கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 21ம் தேதி திருப்பறை சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, கம்பம் நடப்பட்டு, தினமும் இளைஞர்கள் கம்பத்தை சுற்றிலும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடப்பட்ட கம்பத்துக்கு, பெண்கள் தண்ணீர் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர். மார்ச், மூன்றாம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலையில், தீ மிதிக்கும் பக்தர்கள், பவானி ஆற்றுக்கு சென்று, அங்கு புனித நீராடினர். பின், ஈர துணியுடன் கோவில் முன் அமைக்கப்பட்ட, 60 அடி தீ குண்டத்தில், தீ மிதித்தனர். குண்டம் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. இதையடுத்து, மதியம் மாவிளக்கு பூஜையும், பின் அக்கினி கும்பம் எடுத்தலும், மாலையில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று இரவு, ஒன்பது மணிக்கு, அம்மன் முத்து பல்லாக்கில் நகர் வலம் வந்தார். அப்போது அரியப்பம்பாளையம், புளியம்பட்டி பிரிவில், பத்தாயிரம் வெடி வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று, மஞ்சர் நீர் உற்சவம் நடக்கிறது. மார்ச், 11ம் தேதி மறுபூஜையுடன், குண்டம் விழா நிறைவடைகிறது.