வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நாளை (மார்ச் 16) இரவு, நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இக்கோயிலில் திருப்பணி நடந்ததால், கடந்த சில ஆண்டுகளாக, மாசித்திருவிழா நடக்கவில்லை. திருப்பணி முடிந்து கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து, இந்தாண்டு மாசித்திருவிழா மார்ச் 1ம் தேதி பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வந்தார். மார்ச் 9 ல் அம்மன் சாட்டுதலை தொடர்ந்து, மார்ச் 11 முதல் அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவில் முக்கிய வழிபாடான பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் நாளைநடக்கிறது. மார்ச் 17ல் அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும், மார்ச் 18ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.