பதிவு செய்த நாள்
19
மார்
2014
11:03
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில், 24ம் தேதி குண்டம் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 16ம் தேதி இரவு காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று காலை, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று, புனிதநீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி ஸ்வாமியை வழிபட்டனர். மார்ச், 24ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு குண்டம் பற்றவைக்கப்படுகிறது. அன்று மதியம், 1 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் செல்லும், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள, 62 அடி நீள குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மார்ச், 25ம் தேதி, கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் வேண்டி கரும்பு தொட்டில் சுமந்து வந்தும், அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மார்ச், 26ம் தேதி, கம்பம் பிடிங்கி ஆற்றில்விடப்படுகிறது. தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.