பதிவு செய்த நாள்
20
மார்
2014
12:03
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், புதிதாக உருவாக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. அச்சிறுப்பாக்கம் பகுதியில், பிரசித்தி பெற்ற இளங்கிளி அம்மை உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆட்சீஸ்வரருக்கென 70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. இப்பணி கடந்த மாதம் நிறைவடைந்ததையொட்டி, நேற்று தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதை முன்னிட்டு, கடந்த 17ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கும்ப அலங்காரம், தீபாராதனைகளும், 18ம் தேதி பூர்ணாஹூதி, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும், 8:30 மணிக்கு கலசம் புறப்படுதலும், 10:00 மணிக்கு நூதன திருத்தேர் கும்பாபிஷேகமும் நடந்தன. அதனை தொடர்ந்து காலை 10:30 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர்.