பதிவு செய்த நாள்
28
மார்
2014
12:03
சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா, நாளை (மார்ச் 29) இரவு 10:05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம், குழந்தை வரம் வேண்டி நேர்த்தி செலுத்தினால், நிறைவேறும் என்பது ஐதீகம். தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொடியேற்றம்: இக்கோயிலில் பங்குனி திருவிழா, நாளை (மார்ச் 29) இரவு 10:05 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், அதை தொடர்ந்து கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மார்ச் 30 முதல் ஏப்.4ம் தேதி வரை தினமும் இரவு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா வருவார். ஏழாம் நாளான ஏப்.5-ல் பொங்கல் வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன், பொங்கல் வைத்து வழிபடுவர். எட்டாம் நாளான, ஏப்.6-ல் அம்மனின் மின்ரத ஊர்வலம் நடக்கும். ஒன்பதாம் நாளான, ஏப்.7 அன்று காலை 7:35 மணியில் இருந்து அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் சுமத்தல், மாவிளக்கு எடுத்தல் உட்பட பல்வேறு நேர்த்தி செலுத்துவர். அன்று மாலை 6 மணிக்கு, ஊஞ்சல் உற்சவமும்; இரவு 10 மணிக்கு, அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளலும் நடக்கிறது. பத்தாம் நாளான, ஏப்.8 அன்று இரவு 8 மணிக்கு, தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.
சிறப்பு பஸ்கள்: சிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை, மதுரை, காரைக்குடி, சாயல்குடி, கடலாடியில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பரம்பரை அறங்காவலர் எம்.வெங்கடேசன் செட்டியார் தலைமையில், ஏற்பாடுகள் நடக்கிறது. கோவில் விழா சார்ந்த விபரங்களுக்கு, 04564 - 206 614-ல் தொடர்பு கொள்ளலாம்.